26.03.2016 – “முக்கூடல்” நூல் வெளியீட்டு விழா

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 26.03.2016 அன்று
நடைபெற்ற கூட்டத்தில்
பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய
“முக்கூடல்” நூல் வெளியீட்டு விழா
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய
“முக்கூடல்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா சங்கத்தலைவர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில்
26.03.2016 அன்று நடைபெற்றது.
தொடக்க உரை ஆற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேரா.
முனைவர் பு. பிரகாசம் அவர்கள் நூலாசிரியர் ஆண்டவர் அவர்களைப் பற்றி பெருமையுடன் பேசி,
அவருடைய தமிழ்ப் பற்றிணை வெகுவாக புகழ்ந்தார். அவர் எழுதிய “முக்கூடல்” ஆய்வு நூல் மிகச்
சிறப்பாக உள்ளது எனப் பெருமையுடன் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய பேரா. முனைவர் மறைலை இலக்குவனார் அவர்கள் தனது வாழ்த்துரையில்
ஆண்டவர் அவர்களைப் பற்றியும் அவர் எழுதிய “முக்கூடல்” ஆய்வு நூல் குறித்தும் தனக்கே உரிய
பாணியில் பாராட்டி இன்று பிறந்தாள் காணும் ஆண்டவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து
வாழ்த்தினார்.
தலைமை உரையாற்றிய புலவர் த. இராமலிங்கம் அவர்கள் வா.மு.சே. ஆண்டவர் அவர்களை
பற்றியும் அவர் குடும்பத்தாருடன் தனக்குள்ள உறவைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி ஆண்டவர்
இது போன்று பல நூல்களை படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரு. வா.மு. சேதுராமன் அவர்கள் பேசுகையில் தன் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம் என்றும் தனது
பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தனது மனைவியின் ஆசை என்று
நாத்தழுதழுக்க கூறினார். ஆண்டவரும், திருவள்ளுவரும் தமிழ் தழைக்கப் பாடுபடுவதை
நெகிழ்வோடு கூறினார்.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக இயக்குனர் பேரா. முருகன் அவர்கள் ஆண்டவரிடம் தான்
கொண்ட பாசம், நட்பு இவைகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.
நூலினை ஆய்வு செய்த பாரதி பாசறை நிறுவனர் முனைவர் மா.கி. இரமணன் பல்வேறு
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நூலை “இலக்கணவியல்” “இலக்கியவியல்” “அயலகத்
தமிழாய்வு” என மூன்று பகுதிகளாக ஆய்வு செய்துள்ள ஆண்டவர் அவர்களைப் பாராட்டினார்.
தமிழ்ப்பணி ஆசிரியர் திருவள்ளுவர் அவர்கள் “முக்கூடல்” ஆய்வு நூல் எழுதிய தனது இளவல்
முத்துராமலிங்க ஆண்டவர் அவர்களை பெருமளவு பாராட்டிப் பேசினார். நூல் எழுதுவதும் கவிதை
படைப்பதும் தங்கள் குடும்பத்திற்ப் புதிதல்ல என்று கூறினார்.
சோகா இகேதா மகளிர் கல்லூரி தலைவர் டாக்டர் சேது குமணன் அவர்கள் நூலாசிரியர் ஆண்டவர்
குறித்து வெகுவாக பாராட்டினார்.
சிறப்புரை ஆற்றிய பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும், சென்னை
உயர்நீதிமன்ற நீதியரசர் சு.இராஜேஸ்வரன் அவர்கள் நூலை படித்த போது தனது தந்தை
உ. சுப்பிரமணியம் அவர்களை நினைவு கூர்ந்து அவரும் ஒரு தமிழறிஞர் எனவும் அவர்
நூற்றுக்கணக்கான நூல்களை சேர்த்து வைத்து இருந்ததாகவும், தான் வேறு துறையில் கவனம் செலுத்த
வேண்டி இருந்ததால், அவ்வளவு நூல்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு கொடுத்து
விட்டதாக தெரிவித்தார். மிகவும் அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய “முக்கூடல்” ஆய்வு நூல்
சமைத்த ஆண்டவர் அவர்களைப் பாராட்டினார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் அரிமா துரை. சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். அரிமாத.கு.
திவாகரன் அவர்கள் நன்றி கூறினார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் திரு. சோமு நிகழ்ச்சியினை
சிறப்பாக தொகுத்து வழங்கினார். நண்பகல் உணவிற்குப் பின் விழா நிறைவடைந்தது.





