29-11-2015 – முருகன் அல்லது அழகு

அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 29.11.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில்
“முருகன் அல்லது அழகு” என்னும் பொருள் பற்றி
புலவர் தமிழமுதன் அவர்கள் உரையாற்றினார்.
திரு.வி.க. அவர்களின் ‘முருகன் அல்லது அழகு” என்ற நூலை மையமாக வைத்து புலவர் தமிழமுதன் உரையாற்றினார். மணம், இளமை, கடவுள் தன்மை, ஆகிய நான்கு பொருளுடைய ஒரு சொல் ‘முருகு’ என்ற ஒரு சொல். முருகை முருகு உடையவன் முருகு என்றும், முருகன் காலம் கடந்த தமிழர் கடவுள் என்றும், முருகன் என்ற பெயர் அனைத்து மதக்கடவுளுக்கும் பொதுப்பெயர் என்றும் விளக்கினார்.
மணம், இளமை, கடவுள் தன்மை ஆகிய மூன்றும் அழகு என்ற ஒன்றில் அடங்கும். அந்த அழகு இயற்கையில் உள்ளது. இயற்கைதான் முருகன், முருகன்தான் இயற்கை என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். இயற்கையில் உள்ள அழகை உணர்ந்து முருகனை அடைய புலன் தூய்மை வேண்டும் என்பதை விரிவாக விளக்கினார். அழகில் எவ்வாறு தோய்தல் வேண்டும் என்பதை எல்லாம் பாரதிதாசன் பாடல்கள் துணை கொண்டு விளக்கினார். அடுத்து மணம், இளமை, கடவுள் தன்மை, அழகு ஆகிய நான்கும் பெண்மையில் உண்டு என்றும், பெண்ணுக்கும் பெண்மைக்கும் மிக அழகாக
விளக்கினார். தெய்வ அழகாகிய பெண்மையைப் போற்றி, இல்லறத்தில் ஈடுபட்டு விரதம் இருந்து முருகனை அடையும் வழி முறைகளைக் கூறினார். இயற்கை அழகில் மனம் செல்ல வில்லை, இல்லற வாழ்விலும் ஈடுபட முடியவில்லை என்றால், ஓவியம், இசை, இலக்கியம் இவற்றில் ஒன்றைப் பற்றித் தன்னை மறந்த நிலையில் தோய்ந்தும் முருகனை அடையலாம் என்று திரு.வி.க. அவர்கள் நூலில் உள்ள கருத்துகளை எளிய நடையில் விளக்கினார்.

